அன்புள்ள ராட்சசி – பகுதி 44

“பாத்தியா.. இந்த லொள்ளுக்குத்தான் நான் உன்கூட வரமாட்டேன்னு சொன்னேன்..!! ஏண்டா இப்படிப்போட்டு டார்ச்சர் பண்ற..?? சொன்னா கேளு மச்சி.. இதுலாம் வேலைக்காவாது..!!”

“ப்ச்.. இப்போ என்ன ஆயிடுச்சுன்னு இப்படி பொலம்புற..??”

“பின்ன என்னடா.. அவளை கண்டுபிடிக்கிறதுக்காக இப்படி தெருத்தெருவா நாய் மாதிரி அலைய விடுறியே.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா..?? இன்னும் எத்தனை வீடு ஏறி இறங்கப் போறோமோ.. என்னன்ன எழவெடுத்த பிரச்சனைலாம் நீ இழுத்துட்டு வரப்போறியோ எனக்கு தெரில.. ச்சை..!!”

“ஏய்.. கொஞ்சம் பொலம்பாம வர்றியா..!! என்ன கஷ்டமானாலும் சரி.. அவளை நான் கண்டுபிடிக்காம விடப்போறது இல்ல..!!”

“உன் ஆளு, நீ கஷ்டப்படுற.. என்னையும் எதுக்குடா கூட கூப்டுக்குட்டு இம்சை பண்ற..??”

“அது உன் தலையெழுத்து.. வா வா..!!”

சாலமனின் தோள் மீது கைபோட்டு அவனை இழுத்து செல்கிற அசோக்கையே.. மீரா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! முணுக்கென்று அவளுடைய கண்களில் கண்ணீர் பூப்பதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.. வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்..!! வேதனையில் வெடவெடக்கிற உதடுகளை.. பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள்.. ‘ஸாரிடா அசோக்.. ஸாரி..’ என்று மெலிதாக முணுமுணுத்தாள்..!!

“ஹேய்.. அப்படி எதை அவ்வளவு இன்ட்ரஸ்ட்டா பாத்துட்டு இருக்குற..??”

அருகில் குரல் கேட்டதும்.. கண்களில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துவிட்டு.. மீரா படக்கென திரும்பினாள்..!! உதட்டில் ஒரு இளிப்புடன் மனோகர் நின்றுகொண்டிருந்தான்..!! அவனை பார்த்ததுமே மீராவுக்குள் மீண்டும் ஒருவித எரிச்சல்..!! குரலில் உடனடியாய் ஒரு கடுமையை வரவழைத்துக்கொண்டு சொன்னாள்..!!

“உங்ககிட்ட ஏற்கனவே ரெண்டு மூணு தடவை சொல்லிருக்கேன்..!!”

“என்னன்னு..??”

“என் பெட்ரூம்குள்ள வராதீங்கன்னு..!!”

“ஹேய்.. கூல்..!! ரிலாக்ஸ்..!! இது அங்க விழுந்து கெடந்தது.. அதான் உன்கிட்ட கொடுக்கலாம்னு வந்தேன்..!!”

மனோகர் அமர்த்தலாக சொன்னவாறே.. தன்னுடைய வலது கையை மீராவுக்கு முன்பாக நீட்டினான்.. விரித்து காட்டினான்..!! அவனது உள்ளங்கையில் அந்த இதய வடிவ பென்டன்ட் தகதகத்தது..!! அதைப்பார்த்ததும் மீராவுடைய கோவம் கொஞ்சம் வடிந்தது.. படக்கென அந்த பென்டட்டை எடுத்தாள்.. கையை சுற்றியிருந்த ப்ரேஸ்லட்டின் கொக்கியில் அதை மாட்டி.. டைட் செய்தாள்..!!

“தேங்க்ஸ்..!!” என்றாள்.

“ஹ்ம்ம்.. ப்ரேஸ்லட் நல்லாருக்கு..!! மாமா வாங்கி தந்ததா..??” மனோகரின் கேள்வி ஏனோ மீராவை சுருக்கென்று தைக்க.. வெடுக்கென்று அவனை ஏறிட்டு முறைத்தாள்..!!

“இது என் சம்பாத்தியம்..!!” என்று சூடாக சொன்னாள்.

“ஹேய்.. என்ன நீ..?? எதுக்கெடுத்தாலும் சும்மா சும்மா கோவப்படுற..??”

“……………………..”

“ஹ்ம்ம்… பெட்ரூம்க்குள்ள வந்ததுக்குலாம் அப்படி டென்ஷன் ஆகுற..?? அப்படி என்ன பெட்ரூம்ல சீக்ரட் வச்சிருக்குற..?? ம்ம்..??”

சொல்லிக்கொண்டே மனோகர் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்க்க.. அவனது கண்களில் அந்த ஃபோட்டோ ஃப்ரேம் தென்பட்டது..!! அசோக்கும், மீராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ.. ஐந்து நாட்களுக்கு முன்பாக, அந்த ஃபுட்கோர்ட்டில், அசோக்கின் கன்னத்தோடு கன்னம் பதித்து, மீரா எடுத்துக்கொண்ட அந்த ஃபோட்டோ..!! சோகத்தை மறைத்தவாறு மீரா சிரித்துக்கொண்டிருந்தாள்.. அவளுடைய ஸ்பரிசத்தில் விழைந்த சந்தோஷத்தை மறைத்தவாறு அசோக் முறைத்துக் கொண்டிருந்தான்..!!

“ஹேய்.. இது.. இப்போ வந்துட்டுப் போனானே.. அந்தப்பையன்தான..??” மனோகர் ஆர்வமாக கேட்டவாறே அந்த ஃபோட்டோ ஃப்ரேமை கையில் எடுத்தான்..!!

“ஆமாம்..!!” அவசரமாக அவனை நெருங்கிய மீரா, வெடுக்கென அதை பறித்து அதனிடத்தில் வைத்தாள்.

“யார் அவன்..??”

“தேட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ்..!!”

“ஹ்ம்ம்.. வீட்டை காலி பண்ணிட்டு எங்க போறதுன்னு எதுவும் ப்ளான் இல்லைன்னு சொன்ன..?? பாத்தா அப்படி தெரியலையே.. ஏதோ பக்கா ப்ளான் போட்ருக்க போல இருக்கே..?? அவனும் ஆளை பாத்தா சரியான ஏமாளி மாதிரி இருக்கான்..??” மனோகரின் குரலில் இருந்த கேலி, மீராவுக்கு எரிச்சல் மூட்டியது.

“இங்க பாருங்க.. வாய்க்கு வந்தபடி பேசாதீங்க..!! அவனைப்பத்தியும் உங்களுக்கு தெரியாது.. என்னை பத்தியும் உங்களுக்கு எதுவும் புரியாது..!! அவனை மாதிரி ஒரு நல்லவனை எங்கயும் பாக்க முடியாது.. என்னோட கடந்தகாலம் பத்தின எந்த அக்கறையும் இல்லாம.. எனக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்க அவன் ரெடியா இருக்கான்..!! தெரியுமா.?? நான்தான் என்னோட நெலமையை நெனச்சுக்கிட்டு.. எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன்..!! புரியுதா..??”

படபடவென பேசி முடித்த மீரா.. உடனே திரும்பி விடுவிடுவென நடந்து, அந்த அறையை விட்டு வெளியேறினாள்..!! அவளுக்கு தொண்டை வறண்டு போன மாதிரி இருந்தது.. தாகமெடுத்தது.. கிச்சனுக்குள் நுழைந்தவள், குழாய் திருகி.. ஒரு தம்ளரில் நீர் பிடித்து.. கடக் கடக்கென மொத்த நீரையும் தொண்டைக்குள் சரித்தாள்..!! அவளை பின்தொடர்ந்து வந்திருந்த மனோகர்.. அவள் நீரருந்தி முடிக்கும் வரையில் கைகளை கட்டிக்கொண்டு காத்திருந்தான்..!!

பிறகு அவள் நீரருந்தி முடித்ததும்.. தொண்டையை லேசாக செருமிக்கொண்டு.. மீராவை நோக்கி நடந்தவாறே.. குதர்க்கமான குரலில் சொன்னான்..!!

“அப்போ.. வீட்டை காலி பண்ணினப்புறம் அவன் கூட போறமாதிரி ப்ளான் எதுவும் இல்ல..??”

“இல்ல..!!”

“அப்படினா.. நான் அப்போ சொல்ல வந்ததை.. இப்போ சொல்லலாம்னு நெனைக்கிறேன்..!!”

“எ..எப்போ..??”

“கொஞ்ச நேரம் முன்னாடி..!! உனக்கு ஒரு யோசனை சொல்லவான்னு கேட்டேனே..??”

“ம்ம்.. ஆமாம்..!! என்ன யோசனை..??”

கண்களில் ஒருவித கேள்வியுடன் மீரா மனோகரை பார்த்தாள். அவன் இவளுடைய முகத்தையே ஒருசில வினாடிகள் கூர்மையாக பார்த்துவிட்டு, பிறகு சொன்னான்.

“உனக்கு விருப்பம் இருந்தா.. நீ இந்த வீட்லயே தங்கிக்கலாம்..!!”

“வாட்..?? எ..என்ன சொல்றீங்க நீங்க..??”

காதில் விழுந்த வார்த்தைகளை நம்பமுடியாமல்.. மீரா அவனை திகைப்பாக பார்த்தாள்..!! அவனோ உதட்டில் ஒருவித விஷமப்புன்னகையுடன்.. இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..!! பிறகு உதடுகளை மெல்ல பிரித்து.. மிக தாழ்வான குரலில் சொன்னான்..!!

“உன் அம்மா மாதிரி..!!”

அவன் அவ்வாறு சொன்னதுமே மீராவுக்கு சுருக்கென்று இருந்தது.. அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அவளுக்கு புரிவது போல இருக்க.. அதற்குள்ளாகவே அவன்..

“நான் அப்பப்போ வந்து போயிட்டு இருக்கேன்.. உன் அப்பா மாதிரி..!!” என சொல்லிவிட்டு இளித்தான்.

அவ்வளவுதான்..!! மீராவுக்கு அந்த கணத்தில் மனதில் எழுந்த உணர்வுகளை, வார்த்தையில் சொல்வது கடினம்..!! உள்ளுக்குள் கோபம் பீறிட்டு கிளம்ப.. அதை கட்டுப்படுத்திக்கொள்வதற்கு அவள் மிகவும் கஷ்டப்பட்டுப் போனாள்..!! உள்ளத்தில் பொங்கிய ஆத்திரத்தை எல்லாம்.. உக்கிரமாக கண்களில் தேக்கி.. உஷ்ணமான ஒரு பார்வை பார்த்தாள்..!!

‘இதோ.. இன்னொரு அரவம்..!! அம்மா அடிக்கடி சொல்வாளே.. அந்த நச்சுப் பிராணிகளில் அடுத்தொன்று..!!’

மனோகரோ அவளுடைய அனல் கக்கும் பார்வையை கவனத்தில் கொள்ளாமல்.. அவன் பாட்டுக்கு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..!!

“கோவப்படாம கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு.. இது எவ்வளவு நல்ல டீல்னு உனக்கே புரியும்..!! எப்படியும்.. உன்னை பத்தி தெரிஞ்ச யாரும், உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்ல.. அப்படியே பண்ணிக்கிட்டாலும்.. அது என்னைக்கா இருந்தாலும் உனக்கு பிரச்சனைதான்..!! உன் பேக்ரவுண்ட் அப்படி..!! அப்படி யாரையுமே கல்யாணம் பண்ணிக்காம.. கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நிம்மதி இல்லாம.. சொந்த பந்தம் இல்லாம.. சொத்து பத்து இல்லாம.. வாழ்க்கை பூரா நீ கஷ்டப்படுறதுக்கு பதிலா.. இந்த யோசனைக்கு நீ ஓகே சொன்னேன்னு வச்சுக்கோ.. உனக்கு ஒரு வசதியான வாழ்க்கையை அமைச்சு தர நான் ரெடியா இருக்கேன்..!! என்ன சொல்ற..??”

“……………………….” – மீரா இன்னுமே அவனை எரித்துவிடுவது போல முறைத்துக்கொண்டுதான் இருந்தாள்.

“ஹ்ஹ.. புவனாவுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாளோன்லாம் நீ ஒன்னும் கவலைப்பட வேணாம்.. அவளை நான் சமாளிச்சுக்குறேன்.. அது என் பொறுப்பு.. ஓகேவா..??”

“……………………….”

“இங்க பாரு.. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.. அப்புறம் எல்லாம் சரியாயிடும்.. எல்லாத்துக்கும் நம்ம மனசுதான் காரணம்..!! நீ மனசு வச்சா மகாராணி மாதிரி வாழலாம்.. உன்னால முடியும்.. சின்ன வயசுல இருந்தே உன் அம்மாவ பார்த்து வளர்ந்திருக்குற.. I think.. you can do this better than anybody else..!!” சொல்லிக்கொண்டே மனோகர் மீராவின் தோள் மீது கைவைத்தான்.

“கையை எடுறா..!!” மீரா இன்னுமே ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சாந்தமாகத்தான் சொன்னாள்.

“ஹேய்.. நான் என்ன சொல்ல வரேன்னு..”

“அடச்சீய்.. கையை எடுறா.. பொறுக்கி..!!”

பெருங்குரலில் கத்திய மீரா மனோகரின் கையை வெடுக்கென தட்டிவிட்டாள். அவனுக்கு இப்போது பொசுக்கென்று கோவம் வந்தது.

“ஏய்.. என்ன.. ரொம்பதான் துள்ற..?? அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்..?? அதுவும் உன்கிட்ட அப்படி கேட்டதுல என்ன தப்பு..?? எப்படிப்பட்ட அம்மாவுக்கு மகளா பொறந்தோம்னு மறந்து போச்சா..??”

“என் அம்மாவை பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த அருகதையும் இல்லடா.. எச்சக்கல நாயே..!! வீட்டை விட்டு வெளில போ..!!”

“ஏய்..!! என்ன பெரிய பத்தினி மாதிரி..”

மனோகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. மீரா பொறுமை இழந்து போனாள்..!! கிச்சன் மேடை மீதிருந்த அந்த பளபளப்பான, கூர்மையான கத்தியை.. படக்கென கையில் எடுத்தாள்..!! அதை சரக்கென மனோகரின் முகத்துக்கு முன்பாக நீட்டி.. ஆவேசமாக கத்தினாள்..!!

“இன்னும் ஒரு வார்த்தை பேசின.. அக்கா புருஷன்னு கூட பாக்க மாட்டேன்.. அறுத்து எறிஞ்சிடுவேன்..!!!”

அவ்வளவுதான்..!! அவளுடைய முகத்திலும், கண்களிலும், குரலிலும் கொப்பளித்த கோபத்தில்.. மனோகர் மிரண்டு போனான்..!! பயந்துபோய்.. மெல்ல பின்வாங்கினான்..!!

கத்திமுனையிலேயே அவனை வாசல் வரை தள்ளி சென்ற மீரா.. பிறகு அவனை வெளியே விட்டு கதவை அறைந்து சாத்தினாள்..!! அறைந்து சாத்திவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே நின்றிருந்தாள்..!! உள்ளத்தில் எழுந்த வேதனையிலும், கோபத்திலும்.. அவளது உதடுகள் படபடத்தன.. அவளுடைய உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது.. மார்புகள் ரெண்டும் சரக் சரக்கென மேலும் கீழும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தன..!! கையில் கத்தியுடன் வெறிபிடித்தவள் மாதிரி நின்றிருந்தாள்..!!

பிறகு அவளுக்கு என்னாயிற்றோ.. அப்படியே கால்கள் மடங்கி, தரையில் சரிந்தாள்.. தலையை குனிந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்..!! அவளுடைய மனம்.. அத்தனை நேரம் அணிந்திருந்த வீராவேசமான முகத்தினை தூக்கி எறிந்துவிட்டு.. ஒரு கோழைத்தனமான முகத்தினை அணிந்து கொண்டது.. மீராவையும் அவ்வாறு அழுதிட வைத்தது..!!

அந்த மாதிரி அழுது கொண்டே.. நீண்ட நேரம் நிலைகுலைந்து போய் படுத்திருந்தாள்..!! பிறகு வீட்டுக்குள் டெலிபோன் ஒலிக்கிற சப்தம் கேட்டதும்.. மெல்ல எழுந்தாள்..!! பொறுமையாகவே நடந்து உள்ளறைக்குள் சென்றாள்..!! டெலிபோன் ரிசீவரை எடுத்து காதில் வைத்து.. வறண்டு போன குரலிலேயே சொன்னாள்..!!

“ஹலோ..!!”

“ஹாய் பேபிஈஈ..!! ஐ ஆம் பேக்..!!!”

அடுத்த முனையில் ஒலித்த அந்த குரலை கேட்டதும்.. மீரா அப்படியே அதிர்ந்து போனாள்..!! அந்த குரலை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திரவில்லை..!! அவளுடைய இமைகள் படக்கென விரிந்துகொள்ள.. இருதயம் சிலவினாடிகள் துடிப்பதை மறந்து நின்று போனது..!! அந்த குரல்.. அந்த அரவத்தின் குரல்.. காதல் என்ற பெயரில் ஏமாற்றி, அவளது கற்பை சூறையாடி விஷத்தை கக்கி சென்ற அந்த கயவனின் குரல்..!! மீராவுடைய உடம்பு இப்போது ஆத்திரத்தில் முறுக்கேறிக் கொள்ள.. கையில் இருந்த கத்தியை இறுகப் பற்றினாள்..!!

– தொடரும்

Leave a Comment